கினாப் பானா அல்லது கொள்ளையில போவானுகள் செஞ்ச அநியாயம்!

செப்டம்பர்18, 2009 by மட்டக்களப்பான்

 

‘கினாப் பானா’… ‘கி. ப.’ அல்லது கிழக்குப் பல்கலைக்கழகம்…

  • மட்டக்களப்பின் மணிமகுடம்…
  • கிழக்கின் அறிவு ஜீவிகள் கொஞ்சி விளையாடும் கோகுலம்…
  • வடக்குக் கிழக்குக்கு மனிதவளத்தை மேம்படுத்தி இலங்கையின் அபிவிருத்திக்கென வழங்கும் உயர்கல்வித் தொழிற்சாலை…
  • கிழக்கிலங்கையின் விஞ்ஞான ஆராய்ச்சித் தொழிற்பாடுகளின் ஊற்று…

 இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டு போகவரவில்லை. அது ‘நம்மட அப்பா எண்டா மலையயே பிரட்டிருவாரு’… என்று தன் நண்பனை வெருட்டும் மூன்று வயதுக் குழந்தையின் கற்பனைக்கு ஒப்பானது. அக்குழந்தையின் அப்பா நிசத்தில் ‘மப்பு முறியாமல்’ சாக்கடையில் பிரண்டும் கிடக்கக் கூடும்’… அப்படிப்பட்ட நிசங்களின் வலிகள் (ironical realities) குழந்தை மனங்களுக்குத் தென்படுவதில்லை (தென்படவும் தேவையில்லை)! என்னைப் பொறுத்தவரையில் பாமரமக்கள் (அஃதாவது திருவாளர் போதுசனம்) குழந்தைகள் போன்றவர்கள் – பிறர் (அஃதாவது அரசியல்வாதிகள், நிர்வாகிகள், வெள்ளைக்கார தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற ‘பெரியவர்கள்’) காட்டும் படங்களுக்கெல்லாம் டப்பாங்கூத்து ஆடக்கூடியவர்கள்… அதுவும் மட்டக்களப்பின் திருவாளர் பொதுசனம் மிக மிக வெகுளித்தனமானது… இலகுவில் ஏமாற்றப்படக்கூடியது, கினாப் பானா தனக்கு நன்மை செய்யும் என இன்னமும் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றது (இலவுகாத்த கிளியாக).

இந்தக் கல்விக்கூடம் (அதாவது கினாப் பானா) பற்றி நிறையவே எதிர்பார்ப்புகள் பலரிடமுண்டு. அது எமக்குக் கண்கூடாகத் தென்படுகின்றது. ஆனாலும், கினாப் பானா தம் எதிர்பார்ப்புக்களுக்கு அமையத் தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை என்கின்ற ஆதங்கங்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு… இப்படியான ஆதங்கங்கள் தவமிருந்து பெற்ற தன் மகனோ மகளோ தன் எதிர்பார்ப்புக்கு அமைய வளர்ந்து வரவில்லை எனக் கலங்கும் தாய்படும் வேதனைக்கு நிகரானவை…

அப்படிப்பட்ட இரு ஆதங்கங்களை (எனதல்ல… பிறரின்…) இங்கு முன் வைக்கின்றேன்…

ஆதங்கம் #1: மயோன் முஸ்தபாவினது (2008ல் பத்திரிகைகளில் பகிரங்கமாக வெளிவிடப்பட்டது). மயோன் முஸ்தபாவின் சொல்வலிமையும் வன்மையும் நாம் அறிந்ததே. 2008களின் இறுதிக் காலகட்டங்களில் அவர் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் இவ்வாறு கூறியிருந்தார்: (அஃதாவது, அவரின் கருத்துக்களின் சாராம்சத்தினை மட்டுமே நான் தருகின்றேன்).

ஆதங்கம் #2: பெயர் தெரியாத மீன்கருவாடு விற்கும் ஆச்சியொருவரினது (கருவாடு+ஆச்சி = கருவாட்டுஆச்சி = கருவாச்சி?) வெள்ளந்தியான கூற்று. இது 1996/7 காலப் பகுதிகளில், வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகருக்குச் செல்லும் தனியார் பயணச் சேவை ஊர்தியில் சகபயணியான எனக்குக் கூறப்பட்டது.

“கிழக்கிலங்கையில் இருபெரும் பல்கலை உயர்கல்விக் கூடங்கள் உண்டு (அஃதாவது, கினாப் பானா மற்றும் தென் கினாப் பானா என்கின்ற தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய இரு நிறுவனங்கள்). கல்விப் பீடங்களில் (faculties) உரிய தரத்தை எட்டாத பீடாதிபதிகளையும், துறைத்தலைவர்களையும் நிர்வாகிகளாகக் கொண்டு, போதிய ஆராய்ச்சி அனுபவமோ, தகமைகளோ அற்ற விரிவுரையாளர்கள் அரை குறை ஆங்கிலத்தில் கற்பிக்கும் படம் காட்டல் (அல்லது பம்மாத்துக் காட்டல்) இந்நிறுவனங்களில் நடை பெறுகிறது. இந்நிறுவனங்களில் கற்பிக்கும் பெரும்பான்மையான விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் கற்பிப்பதற்குப் போதுமான அறிவு மற்றும் அனுபவம் அற்றவர்கள்! அரைகுறை ஆங்கிலத்தில் வெந்தும் வேகாததுமாக வழங்கப்படும் விஞ்ஞானக் கல்விகற்றுப் பட்டம் பெறுவோர் நிலைதான் என்ன? இப்படியாயின், கிழக்கிலங்கையின் எதிர்காலம் எவ்வாறு சுபீட்சமானதாக மலரும்”…?  - இவ்வாறு மயோன் முஸ்தபா தனக்கே உரியதான பாணியில் கேட்டிருந்தார். (சுருங்கக் கூறின், ‘பரமார்த்தகுருத்தனமான’ நடவடிக்கைகள் உருவாக்குகின்ற சீடர்களான பட்டதாரிகளால் குறிப்பிடத்தக்கதான பயனொன்றுமில்லை என்பதுவே மயோன் முஸ்தபாவின் கருத்தாகின்றது).

இதுவல்லவோ கேள்வி! கினாப் பானாக்கெதிரான காத்திரமான சாடல் இது… என்றெல்லாம் எண்ணவே வேண்டாம். அடியேனின் பார்வையில் மயோன் முஸ்தபாவின் சாடலானது மிக மிகச் சைவமானது… ஒரு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்புள்ள அரசியல்வாதியின் நியாயமான ஆதங்கமது!

அப்படியாயின் கினாப் பானாவுக்கெதிரான அசைவச் சாடல் எப்படியிருக்கும்?

கச்சான் காற்று சுழற்றியடிக்கும் ஆகஸ்டுமாதம் (1996 அல்லது 1997 ஆண்டு எனக் கொள்க)… வாழைச்சேனையில் இருந்து செங்கலடியூடாக மட்டக்களப்பு நகர் நோக்கிச் செல்லும் தனியார் பயண ஊர்தியில் வந்தாறுமூலையில் அடியேன் தொத்தியேறினேன். வியர்வைக் கசகசப்பும், சனவெக்கையும் புழுதியும் கலந்து எழுந்த மணம் அடிமட்டத்தில் இருக்கின்ற அபிவிருத்தியடையாத மூன்றாமுலகத்திற்கு மட்டுமே உரியது என்பது எனக்கு விளங்கத்தொடங்கியிருந்த காலமது. நெருக்கியடித்து எப்படியோ ஒரு இருக்கையைக் கைப்பற்றிக்கொண்டு பெருமூச்சு விட்டபோது, மிச்சம் சொச்சமுள்ள காவிப்பற்களினைக்காட்டி அருகிலிருந்த ஆச்சியொன்று சிரித்தது. கள்ளம் கபடமற்ற அதி-பாமரத்தனமான புன்னகையது. அதன்முன் டாவின்சி வரைந்த மோனாலீசாவின் புன்னகையெல்லாம் நிச்சயமாகத்தோற்றுப் போய்விடும்… அப்படியான உள்ளத்தையுருக்கும் மோனப்புன்னகை… ஆச்சியின் பக்கத்தில் கருவாட்டுக்கூடை, மட்டக்களப்புப் பெரிய சந்தை நோக்கிய பயணம். தள்ளாதவயதிலும், அயராது உழைக்கும் உழைப்பபாளிக்கான கம்பீரமும் பணிவும் சேர்ந்த தோற்றம் ஆச்சியினது.

‘என்ன கிளி, கெம்பசில இருந்தா வாறா? என்ட பேரனுந்தான் இஞ்ச படிக்காரு… புதுசாச் சேந்த புள்ளகள செரியாப் போட்டு ரேகிங் ரேகிங் எண்டு ஆக்கினப் படுத்துறானுகளாம் எண்டு சொல்லுறாரு… தாங்க ஒண்ணாதாம்… அவரு எல்லாத்தெயும் விட்டுட்டு அவங்கட அண்ணாச்சிட கடயில போயி நிக்கப் போறாராம் எண்டு நேத்து அழுதாரு… படிப்பு முக்கியந்தானே பல்லக்கடிச்சிட்டுப் படி மனே எண்டுதான் நாம சொல்லியிரிக்கம்…’ (குறிப்பு: ‘கிளி’ என்பது வயது முதிர்ந்தவர்களால் வாஞ்சையுடன் தம்மிலும் இளையவர்களை அழைக்கும்போது பயன்படுத்தப்படும் மட்டக்களப்புத் தமிழ் வார்த்தைப் பிரயோகம். ‘மனே’ என்பது மகனே அன்பதன் மருவிய வடிவமாக மட்டக்களப்புத் தமிழில் பயன்படுத்தப்படும். ‘ஒண்ணாது’ = மட்டக்களப்புத் தமிழில் முடியாது எனப் பொருள்படும்).

இவ்வாறாக ஆச்சி தன் கதைப்பெட்டியை அவிட்டு விட்டது.

“மெய்யாவா? சரியாக் கஸ்டப்படுத்துறானுகாளா”? – இது நான்…

‘ஓம் மனே, இந்தக் கெம்பஸ் முந்தி வந்தாறுமூல மாவித்தியாலயமாத்தானே இருந்திச்சு. அப்ப எண்டா என்ன அளகான பள்ளியது! இப்ப கெம்பசா மாத்திப் போட்டானுகள். பேரன் சொல்லுறாரு படிப்பும் பெரிசா சொல்லுறமாதிரி இல்லயாம்… பாரன், சுத்திவழச்சி மதிலெல்லாம் கிறுக்கி வெச்சிரிக்கானுகள்… படுபாவிகள்! கொள்ளையில போவானுகள் நல்ல ஒரு பள்ளிய (அதாவது பாடசாலை) எலுவா பழுதாக்கிப் போட்டானுகள்! கெம்பசாக்கிறத்துக்குப் பதிலா மாவித்தியாலமாயே இருந்திருக்கல்லாம்… என்ட மூத்த மச்சினன் மாவித்தியாலத்தில படிச்சித்தான் பிரிஞ்சிப்பலா வந்தவரு! என்ன மாதிரிப் பள்ளி அது… கொள்ளையில போவானுகள் செய்யுற அனியாயம் எண்டா கொஞ்சமில்ல! கெம்பஸ் வாத்திமாருக்கு மதியில்லயா? புதுப்புள்ளகளப் போட்டு சித்திரவத செய்யுறதப் பாத்துட்டு சும்மா இரிக்கானுகள்… நாமளும் கஸ்டப்பட்டுத்தானே அதுகள படிக்க வெக்கிறம்… கூத்தாடயும் மறுகாக் குடிச்சிக் கெடயும் இல்லத்தானே’! (குறிப்புக்கள்: ‘எலுவா’ என்பது மட்டக்களப்புப் பேச்சுவழக்கில் ‘அல்லவா’ என்பதற்குப்பதிலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. ‘மறுகா’ என்பது பழந்தமிழ் வழிவந்து மட்டக்களப்பில் இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை – இது ‘அப்புறம்’ அல்லது ‘மேலும்’ என்கின்ற தொனியில் பயன்படுத்தப்பட்டு வரும்).

மட்டக்களப்புத் தமிழின் பிரத்தியேகமான ‘இழுவன்னா’வுடன் இவ்வாறு ஆச்சி தொடர்ந்தும் அடுக்கிக் கொண்டு போனது. வெயிலிலும் மழையிலும் அயராது உழைத்து முதிர்ந்த பழுத்த அனுபவத்தின் மூலத்திலிருந்தெழுந்த உண்மைக் கருத்துக்கள்! ஆச்சிக்குத் தன் கருத்துக்களை சொல்வதற்கு எந்தவிதமான தடையுமில்லை, ஆச்சியின் ஓட்டைவாய்க்கு எந்தக்கொம்பனும் எந்தவிதமான கட்டுப்பாடும் போட முடியாது… தனது பேரனினதும் தனது பிரதேச அனுபவத்தினதும் அடிப்படையில் கருத்துக்களை லாகவமாக எடுத்துச் சொல்லி வசைபாடிவிட்டது. இதைவிட அசைவமான முறையில் கினாப் பானாவை எவராலுமே சாட முடியாது.

தூஷணவார்த்தைகளால் திட்டி எத்தனை கோடி மொட்டைக் கடிதங்கள் எழுதினாலும்… ‘கொள்ளையில போவானுகள் செய்யுற அனியாயம் எண்டா கொஞ்சமில்ல! கெம்பஸ் வாத்திமாருக்கு மதியில்லயா?’ – என்கின்ற பாமரக் கருவாச்சியின் (அஃதாவது, கருவாடு விற்கும் ஆச்சியின்) சொற்களின் காத்திரமோ அமிலத்தன்மையோ வந்து சேராது. அது நிச்சயம்! மேலும், நல்லவொரு பள்ளிக்கூடத்தை பல்கலைக்கழகமாக மாற்றிப் பாழடித்துவிட்டார்கள் என்கின்ற தொனிப்பொருளில் ஆச்சியால் கூறப்பட்ட கருத்தின் பின்னால் கினாப் பானா என்கின்ற உயர் கல்வி நிறுவகத்தின் முகாமைத்துவ மற்றும் திட்டமிடல் செயற்பாடுகள் தொடர்பான அதி மட்டப் பாமர மக்களின் காத்திரமான ஐயப்பாடுகள் வெளிக்கொணரப்படுகின்றன.

உண்மையிலேயே மதிகெட்டுத்தான் கினாப் பானா இன்றும் நடக்கின்றது, நடத்தப்படுகின்றது. கல்விக் கூடம் கல்விக்களமாக மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் சாக்கடையாகவோ, அதிகார மோகம் கொண்ட முதலைகள் பதவிப் போட்டியிடும் அசிங்கமான போர்க்களமாகவோ மாறக்கூடாது… கோமாளித்தனமான ‘யார் பெரியவர்’ என்கின்ற வகையில் நடக்கும் இழுபறிகளால் கினாப் பானா இழந்தது அதிகம்…

அப்படியான கோமாளித்தனத்துக்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்…

2008ம் ஆண்டில் மட்டக்களப்பில் சூழல் முகாமைத்துவம் தொடர்பான மாவட்ட ரீதியிலான செயலமர்வொன்று நடந்தது. அரச மற்றும் அரச-சார்பற்ற திணைக்களங்களினதும் நிறுவகங்களினதும் பிரதிநிதிகள் பாரிய அளவில் பங்கு கொண்ட நிகழ்வு அது. கினாப் பானாவிலிருந்தும் சிலர் (கோமாளிகள்?) சென்றிருந்தனர். மட்டக்களப்பின் வடபுலமான கடனீரேரியொன்றின் அபிவிருத்தி சம்பந்தமாகப் பல விடயங்கள் ஆயப்பட்டன. குறிப்பிட்ட கடனீரேரியில், கடலுக்கண்மித்ததாகத் துறைமுகம் ஒன்றினை நிறுவலாம் என ஒரு அரச அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதி முன்மொழிந்தார். ‘அவ்வாறு செய்வது சரியா, பிழையா?’ எனக் காரசாரமான விவாதம் தொடர்ந்தது. அனைவரும் விவாதத்தில் ஆக்ரோஷமாகப் பங்குபெற்றனர், கினாப் பானாவின் பிரதிநிதிகளைத் தவிர… கினாப் பானாவினர் மயக்கும் மோனச் சிரிப்புக்களுடன் (செயலமர்வில் வழங்கப்பட்ட) மசால் வடையுடன் தேனீர் அருந்திக்கொண்டிருந்தனர்.

‘சேர், நீங்க என்ன சொல்லப் போறீங்க?’ எனச் செயலமர்வினை நடாத்திய அதிகாரி கினாப் பானாக் குழுவின் தலைவராக வந்திருந்தவரிடம் கேட்டார். அவர் அப்படிக் கேட்டிருக்காமல் விட்டிருக்கலாம். இக்கேள்வி கேட்டிருக்கப்படாவிடின் கினாப் பானாவின் மானம் கப்பலேறுவது அன்று சற்றுத் தாமதமாகியிருக்கும் அல்லது நடந்திருக்க மாட்டாது. கினாப் பானாவின் கால கஷ்டம் – கேட்கப்படக் கூடாத கேள்வி கேட்கப்பட்டுவிட்டது.

துள்ளிக் குதித்த படி, இக்கேள்விக்கு கினாப் பானாவின் பிரதிநிதிகளின் தலைவர் உடன் வழங்கிய பதில்…

“நீங்க எல்லாரும் கதைச்சிப் பேசி உங்கட முடிவுகள எங்களிட்டச் சொல்லுங்க – மறுகா நாங்க அறிவிஜீவிகளெல்லாம் உங்கட முடிவுகள அலசியாராஞ்சி திட்டவட்டமா ஒரு கடசி முடிவச் சொல்லுறம், அத நீங்க நடமுறப் படுத்துனாச் சரி…”  இதுவல்லவா அதிசாணக்கியத்தனமானதும் அறிவார்த்தமானதுமான பதில்! (அல்டிமேட் ஸ்டார் எனக்கூறிப் பிதற்றும் நடிகர் அஜித்குமாரின் படமொன்றில் ‘தல போல வருமா?’, என்று ஒரு பாடலுள்ளது. அந்தவகையில், கினாப் பானாக் பிரதிநிதிக் குழுவின் ‘தல’ போல கோமாளித்தனம் செய்ய வேறு எவருக்கும் இயலுமா, என்ன’?).

குறிப்பிட்ட செயலமர்வு அதி-பிரளயமாகத் தொடங்கி விட்டது. “கினாப் பானாவில் படிப்பிப்பவர்கள் மட்டும் தானா மண்டைக்குள் சரக்குள்ளவர்கள்? அவர்கள் மட்டும் தான் அறிவிஜீவிகள் என்றால் மட்டக்களப்பில் மற்றவர்கள் எல்லாம் அரைஜீவிகளா”? அனைவரும் குழம்பத் தொடங்கினர்.

“விஞ்ஞானம் என்பது மக்களுக்கானது… பல்கலைக்கழகங்களின் தலையாய கடமை பாமரர்கள் தங்கு தடையின்றிப் பயன்படுதுவதற்காக அறிவுக் களஞ்சியங்களை திறந்து விடுதல்…. பல்கலைக்கழகங்கள் சமுதாயத்திற்காகவே இயங்குகின்றன (மாறாக அவற்றுக்காக சமூகம் இயங்குவது இல்லை)…” – இப்படியான ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களையும் விஞ்சிய அரைவேக்காட்டுக் கோமாளித்தனத்தால், ‘தல’யும் அவர்தம் சகபாடிகளும் அன்று கினாப் பானாவின் மானத்தை வெற்றிகரமாகக் கப்பலில் ஏற்றினர். ‘தல’யின் இந்தப் பகிடி இன்றும் (மட்டக்களப்பில்) அரச (மற்றும் அரச சார்பற்ற) திணைக்கள மட்டங்களில் பரவலாகக் குறிப்பிட்டுப் பேசப்படுகின்ற ஒரு வேடிக்கைத்துணுக்காகி விட்டது.

‘தல’ என்று தட்டச்சுச் செய்யும் போதே இரு inverted commaக்களும் எருமை மாட்டின் கொம்பு போல இருப்பதனைக் கவனிக்கவும்… மதியில்லாமல் ஐந்தறிவுத்தனமாக (அஃதாவது சிங்களத்தில் கூறுவதானால் – ‘கொணேக் வாகே’) படித்தவர்கள் கதைக்கக்கூடாது. பட்டமும், பட்டமேற்படிப்பும், கலாநிதித் தகமையும் பெற்றுவிட்டால் கொம்பு முளைத்துவிடுமா என்ன? எவ்வளவு உயரம் சென்றாலும், கால்கள் என்றுமே தரையில் நிற்க வேண்டும். இல்லையெனில், நாம் மற்றவர் பார்வையில் கோமாளிகளாகிவிடுவோம்! (குறிப்பு: சிங்களத்தில் ‘கொணேக் வாகே’ என்பது – முட்டாள் தனமாக மாடுபோல் நடப்பவரைக் கடியப் பயன்படுத்தும் ஒரு அதிசைவத்தனமான வார்த்தைப் பிரயோகம்). பகிடியாகக் கதைப்பது தான் என்நோக்கமெனில், மேலும் பல கினாப் பானா தொடர்பான கோமாளிக் கூத்துக்களைப் பட்டியலிட்டு என்னால் அலச முடியும். ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏனெனில், கோமாளித்தனத்துக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?

வருந்தத் தக்க விடயம் என்னவென்றால் இத்தகைய கோமாளித்தனங்களாலும், அசமந்தப் போக்குக்களாலும், மற்றும் அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கான குடுமிப்பிடிக் குழாயடிச் சண்டைகளாலும் கினாப் பானா அளவுகணக்கில்லாமல் தடம்புரண்டுகொண்டிருக்கின்றது என்பதனை (என்றுமே) ஏமாளிகளான “திருவாளர். மட்டக்களப்புப் பொதுசனம்” கண்டும் காணாமல் இருப்பதுதான்.

மட்டக்களப்புத்தனமாக ‘கினாப் பானா அல்லது கொள்ளையில போவானுகள் செஞ்ச அநியாயம்!’, என்று இப்பதிவிற்கு (அஃதாவது, blog entryக்கு) ஏன் நான் தலைப்பிட்டேன் (?) என்பது இப்போது வாசகர்களாகிய உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கின்றேன்.

‘சிறுக்கி சிரிச்சி வந்தா சினாத் தானடோய்’, என்று டப்பாங்ககூத்துத் தனமான சினிமாப் பாடலொன்று இருக்கின்றது. அதேபோல், ‘அறிவு கிறுகிக் குறுகி வந்தா கினாப் பானாடோய்’ என்றோ, ‘பொறுக்கி சிரிச்சு வந்தா கினாப் பானாடோய்’ என்றோ உரக்கப் பாடியபடி டப்பாங்கூத்து ஆடலாம் போல எனக்குத் தோன்றுகிறது. கூத்தாடுவதற்கு, அநாகரிகக் கோமாளிகளுக்கா கினாப் பானாவில் பஞ்சம்? (குறிப்பு: ‘கிறுகி’ என்பது மட்டக்களப்புத் தமிழ் வழக்கில் ‘சுழன்றடித்து’ வருவதனைச் சுட்டும். நான் ‘கிறுகி’யை குழப்பிச் சுழன்றடித்துவருவதான பொருள்பட[வே] மேற்படி பந்தியில் பாவித்துள்ளேன்).

எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னமும் கினாப் பானா சாம்பலில் இருந்து எழும் பீஃனிக்ஸ் பறவை போல் உயிர்தெழுந்து உரம்பெற்று உயரச் செல்லும் (கிழக்கிலங்கையையும், ஏன் முழு இலங்கையையுமே மேம்படுத்துவதான உயர் கல்விக்கூடமாக மிளிரும்) என நான் இன்னமும் நம்புகின்றேன். என் போன்ற பல பாமரர்கள் இன்னமும் அப்படித்தான் கினாப் பானவில் குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம் நம்பிக்கைகள் கினாப் பானாவினரால் வீணடிக்கப்பட்டு விடக் கூடாது.

களைகளைக் களைந்து பீடங்களில் தொற்றியிருக்கும் பீடைகளை அழித்துப் புதுமெருகுடன் கினாப் பானா மலரும் நாள் எப்போது? பாமரர்களாகிய நாம் இலவுகாத்த கிளிகளாய்க் காத்திருக்கின்றோம்…

 நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றுக்கொள்கின்றேன்! பெயித்து வாறனா?

வட~கிழக்குப் பல்கலைக்கழக அறிவு ஜீவிகளுக்கு ஒரு கடிதம்…

செப்டம்பர்9, 2009 by மட்டக்களப்பான்

மதிப்பிற்குரிய இலங்கையின் வடக்குக்-கிழக்குப் பிராந்திய பல்கலைக்கழக ச் சமுதாயத்தின்அறிவு ஜீவிகளே,

உங்களால், உலகளாவிய வலைப்பின்னலில் இருந்து அறிவுசால் விடயங்களைக் களவாட சாதாரணமாகவும் அநாயசமாகவும் பயன்படுத்தப்படும் “வெட்டி ஒட்டும் (cut and paste – plagiarism) தொழினுட்பத்தினை” அலசலில் இருந்து சற்று  விலகி… “வெட்டி ஓடும்” குள்ளநரித்தனமான மதிநுட்பம் பற்றிச் சற்று ஆராய்வோமா?

வடபுலப் பாணர்களின்  பல்கலைக்கழகத்தின் – குளங்கள் சூழ் பிரதேசத்தில் அமைந்துள்ள வளாகத்தின் பிரயோகத்தின் விஞ்ஞான முறைமைகளின் பீடத்தின்பீடாதிபதி பெருமதிப்பிற்குரிய எங்கள் கலாநிதி. “தேவர்களின் கோன்” ஐயா அவர்கள் ஏப்பிரல் மாதம் 6ம் திகதியுடன் (2009 ஆண்டு) இப்பிரதேசத்திலிருந்து ‘திறந்து விட்ட பல்கலைக்கழகத்துக்கு’ மாற்றலாகிக் கொழும்பு ஏகினார்…

அடியேன் பல்கலைக்கழக அதிகார-அரசியல் நீரோட்டதில் சேர்க்கப்படவோ, அதற்கு இன்றியமையாத அடிவருடல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் படவோ முடியாதவன் (அதாவது ஒரு கடைந்தெடுத்த “காட்டான்”) என்கின்ற நிசம் அவருக்கு உறைத்த காலங்களிலிருந்து என்னை ஒரு தூசாகவே பாவித்த அவருக்கு… என்ன தோன்றியதோ தெரியவில்லை… 6ம்திகதி பின்னேரம் 3.45 அளவில் என் ஆய்வுகூடத்திற்குள் அவரது குள்ளக்கால்களால் தொந்தி குலுங்க ஓடோடிவந்து எனது கரம்பற்றியிழுத்துக் கைலாகு தந்தார். “புவிச்சரிதவியல் தகவல் தொகுதியியல் தொழினுட்பம் (பு.த.தொ^2) மிகவும் நூதனமானது”, என்றும், “அதனை தான் என்வழியாக லங்கையின் வடபுலத்தில் பயிரிட்டுள்ளதாகவும்… அதற்கு நீரூற்றி பராமரித்துப் பெரு விருட்சமாக்கும் பொறுப்பு அடியேன் பாமரன் என் கைகளிலேயே உளது”, என்றும் கூறிச் சென்றார். அவர் இங்கிருந்த 3 ஆண்டுகளில் பிரதேச அபிவிருத்திக்காக பேனா கையில் எடுத்துப் போராடிப் பல களங்கள் கண்டு வெற்றிக்கொடி நாட்டியதாகவும் அவரும் சகபாடிகளும் அவரது பிரிவுபசார வைபவத்தில் கொக்கரித்துக்~கெக்கரித்துக்கொண்டார்கள்…

அவர் அறியாதது நான் எனது முனைவுப்பட்டத்தை பு.த.தொ^2 முறை சார்ந்து பெற்றுக்கொள்ளவில்லை என்பதனை. மேலும் முனைவன் என்பதற்கும் எனது போக்கிரித்தனமான உருவப்பொலிவுக்கும் இம்மியளவுமே தொடர்பில்லை. இவரது நிர்வாகம் தான் அடியேனை இனிவரும் அரையாண்டுப் பருவத்துக்கு நுண் பொருளாதாதாரம் படிப்பிக்கவும் பணித்திருக்கின்றது… புல்லாங்குழல் அடுப்பூதுமா? இல்லை கொல்லனின் துருத்தி பூபாளம்தான் பாடுமா? நான் புல்லாங்குழலா? கொல்லனின் துருத்தியா? இல்லை வெறும் வெற்று வேட்டா? அறியேன்… ஆயினும் எனக்கும் வணிகத்துறைக்கும் எட்டாம் பொருத்தம் என்பது
மட்டும் வெள்ளிடை மலை…

மேலும், இந்த ஆண்டின் மார்ச்சு மாதத்தின் ஒரு இனிய காலைப்பொழுதில் அடியேனைக் கடியவேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்துடன் தன் அலுவலகத்திற்கு வரப் பணித்த கலாநிதி. அவர்கள் தன் குரலுயர்த்திக் கூச்சலிடத்தொடங்க நான் சொன்னேன் “செரி, செரி… நீங்க கத்தி முடிச்சித்து நம்மள கூப்பிடுங்க… அது மட்டும் நாம வெளியில நிக்கம்’ என்று (மட்டக்களப்பு வட்டாரப் பேச்சு வழக்கில்)…

அது அவரைப் பாதித்ததா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை… ஆனால்… அவர் பதிலாக (?) கூறிய ஆங்கில வசனம் மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்தது… அவர் சொன்னார்… “dont’ you think that I am funny” என்று. “Funny or funny boy” என்றால் ஆங்கில தெருப்பாசையில் ஓரினச் சேர்க்கையிலீடுபடும் ஈனப்பிறவி (அதாவது, மாமாப் பயல்) என்று அர்த்தம்…

இப்படியான செகசிற்பியருக்கே (விபுலானந்தரின் Shakespeareக்கான தமிழாக்கம்) ஆங்கிலம் கற்பிக்கக் கூடிய புலமை படைத்தவர்களுக்கு பெரிய மனவருத்தம் ஒன்றுள்ளதாம்… தாங்கள் உயர், மற்றும் அதியுயர் கல்வி-கேள்விகளை ஆங்கிலத்திலேயே பெற்று விட்டதால் தமிழில் சரளமாக உரையாடுவதற்கு தம்மால் முடிவதில்லை என்று! நன்றாக ஊண்டித் தலையில் குட்டினால் ‘máter’ (மேற்றர்) என்று இலத்தீனிலோ அல்லது ‘oh, my mother’ என்று ஆங்கிலத்திலோ குழறியழுவார்களா? சோதித்துப் பார்க்க வேண்டிய விடயம் இது! யாரும் ஆய்வுக்குட்படுத்தலாமே???

இப்படியான அதி மடத்தனமான பரமார்த்தகுருக்களினால் நிரப்பப்பட்டிருக்கும் இந்த வடக்குக் கிழக்குப்
பல்கலைக்கழக சமுதாயம் நேர்ப்படுத்தப்படுவது எப்போது?

குள்ள நரிகள் வெட்டி ஓடிவிடுவது எதற்காக…? கலாநிதியவர்கள் கினாப் பனாவிலிருந்தும் இவ்வாறே தானே ஓடித்தப்பினார்… ஓடட்டும்… நன்றாக… வாழ்வின் எல்லை வரை!

அடிவருடலும், கேனத்தனமும் மிகுந்து போன இந்த உளுத்துப்போன பல்கலைக்கழகக் கட்டமைப்பை புனருத்தாரணம் செய்யப்போகும் புரட்சியாளன் யார்? அவன் வருகைக்காகக் காத்திருப்போம்…

 மேலும் கேட்கின்றேன்: “அப்படியாகப் பட்டவன் ஒருவன் இந்தக் கேனத்தனமான தமிழ் சமுதாயத்தில் எப்போதாவது இருக்கத்தான் முடியுமா?”

பதிலை எதிர்பார்த்திருகின்றேன். பதில் எழுத வக்கிருக்கா உங்களுக்கு???

இங்கனம்,
பணிவுடன் கடைஞ்செடுத்த காட்டான்…

கிழக்கு வெளிச்சாச்சா? மெய்யாவே? சொல்லு கிளி…

செப்டம்பர்9, 2009 by மட்டக்களப்பான்

 

கிழக்கிலங்கையில்

எல்லாமே நன்றாய் நடக்கிறதாம்!

யார் சொன்னார்?

கட்சிகள் மாறியிருக்கின்றன

அபிவிருத்தி என்கின்ற பெயரில்

இலங்கை நிர்வாக சேவை உயரதிகாரிகள்

வழமை போல் களவெடுக்கின்றனர்…

துவக்குக்கள் போய்விட்டன…

சமாதானமாம் (?) என்கின்றார்கள்!

ஆனாலும், இன்னமும் சென்றியில் சிங்களத்தில் கேள்வி கேட்கிறான்…

ஒரு கறுமமும் விளங்குதில்லை!

தினமுமே எங்கேயோ ஒரு இடத்தில் யாரோ ஒரு தாய் பெற்ற பிள்ளையை இன்னொரு தாய் பெற்ற பிள்ளையொன்று ‘மண்டையில் போடுகிறது’

மரணங்கள், மரணிக்கப்படுதல்கள்… இன்னமும் தொடர்கின்றன…

எம்மத்தியில் பஜிரோக்களும் ஹமீடியாஸ் சூட்களும் வந்துவிட்டன

செல்லிடப் பேசியில் அபிவிருத்தி பற்றி நிர்வாகக் கிழார்கள்

அடுக்காய் அறுத்துக் கொண்டே போகின்றார்கள்…

சுவிஸ் கணக்குக்கள் நிறைகின்றன…

குப்பையும் புழுதியும் அனல் வெக்கையும்

அப்படியேதானிருக்கின்றன…

வீதிகளில் குழிகள் சற்றுப் பெரிதாகி விட்டிருக்கின்றன…

சாக்கடை மணமோ தாங்க முடிவதில்லை…

டெங்கு கூடப் பரவுதாம் வேகமாய்…

இதெல்லாம் முன்னேற்றமா?

சொல்லன் மனே… ஒனக்கு விளங்குமே சுளுவா?

எது வருமோ தெரியாது…

நிச்சயமாக வரும் இந்த வருடம் தண்ணீர்ப் பஞ்சம்…

வழமை போல்…

கேட்கின்றேன்… (?)

கிழக்கிலங்கையில் எல்லாமே நல்லாய் நடக்கின்றதா?

என்னத்தச் சொல்லிக் கிழிக்க… (!)

விவசாயிகள் வெற்றுக் கொட்டாவி விடுகின்றார்கள்…

கடற்றொழிலாளர் உள்ளங்கை கைபார்த்து வெறிக்கின்றார்கள்…

 சோத்துக்கு மாரடித்தல் இன்னமுமே தொடர்கிறது… தொப்புழ்கொடிப் பந்தம்போல…

 இன்னொரு சுனாமியோ சூறாவளியோ வந்தா மட்டுந்தானா மக்காள்

(வழமை போல) நம்மளுக்கு நிவாரணம் தருவீங்க?

நாய்களின் இயல்பும் எனது இயலாமையும்…

மார்ச்29, 2009 by மட்டக்களப்பான்

 

நல்லது தின்ன

நாய்க்குத் தெரியாதென்பது

நன்றாகவே விளங்கி விட்டது

ஓஓஓ…ஊஊவென்று ஊளையிடும்

நாய்கள் மத்தியில்

குரைக்காமல்

கதைக்க முயன்ற

எனக்கு…

கடவுளின் வழி (தன்னிலையுணர்தல்)

மார்ச்29, 2009 by மட்டக்களப்பான்

கடவுளின் வழியில் நடப்பதென்பது
கடினமானதுதான்…

கற்களும் முட்களும்
காலை ரணமாக்கும்
கொதி மணலில் கால் வேகும்
அக்கரைப் பச்சையாய்ப் பாவிகளின்
இராசபாட்டைகள் தென்படும்
அவர்களின் கூத்துக்களும் கும்மாளங்களும்
சிந்தை மயக்கும்
மதிமயக்கும்
(நம்மை மாற்றவும் கூடும்)

ஆனாலும்
விடாத முயற்சியுடன் வேதனைகளைத் தாங்கிக்
கடவுளின் வழியில் நடப்பவர்கட்கு
தூரத்தில் தொடுவானில் குளிர்மையாக(க்)-
கடவுளின் அரவணைக்கும் கரங்கள் தென்படும்
ஓங்கார நாதத்தினில் எழுந்த ஆதியந்தத்தின் அடிப்படையான, எம் தாயினும் மேலான அந்தக்குரல் ‘என்னிடம் வாவென’ விளிக்கும்
வாக்குறுதியளிக்கப்பட்டதான வாடாத அந்தத் தோட்டத்தின்
சில்லென்ற காற்று மென்மையாக ஒருமுறை
வருடிச்செல்லும்
மனது இலேசாகும்
தூய நோக்கம் வந்து நோவை
மறக்கடித்துவிடும் –
முதுகெலும்பு பலம் பெற்று நிமிர்ந்து விடும்
கம்பீரம் நிலைகொள்ளும்
நடப்பது சுகமாகும் (நமக்கு)!

நடந்துகொண்டேயிருப்போம்
அவன் காட்டிய வழியில் – நிம்மதியாக…

மீண்டும் வருவேன்…

மார்ச்12, 2009 by மட்டக்களப்பான்

 

தலைமேல் வேலைப்பழுவினால் அல்லாடிக் கொண்டிருக்கின்றேன்…என்ன செய்ய? மாசச் சம்பளத்துக்கு தலைகுனிய வேண்டிய நாய்ப்பிழைப்பு என்னது… விரைவில் புதிய பதிவில், புதிய செய்தியுடன் சந்திப்பேன்…

“அனர்த்த முகாமைத்துவமும்~மட்டக்களப்பும்” பற்றிய என் அலசல் அல்லது வசை பாடல் ஒன்றை நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம்…

என்னசொல்லி (வசை) பாடுவது?

ஜனவரி3, 2009 by மட்டக்களப்பான்

எழுதத் தொடங்கியிருக்கின்றேன்… நல்லது தான். ஆனால், எதனைப் பற்றி எழுதுவது? மேலும் எதற்காக எழுதத் தொடங்கியிருக்கின்றேன்? இப்படியான கேள்விகள் எனக்குள்ளே எழுந்துகொண்டேயிருக்கின்றன. இப்படி அப்படியெல்லாம் எழுதுவதற்கு நான் என்ன எழுத்தாளனா என்றுகூட ஒரு கேள்வி (எனக்குள்ளும் உங்களுள்ளும்) எழலாம். பயம் வேண்டாம். நான் ஒரு எழுத்தாளன் அல்ல! அதனால் எழுத்தாளர்களின் அதிபவித்திரமான பிரத்தியேக எல்லைகளுக்குள் வரவும் மாட்டேன். மறுதலையாகப் பார்ப்பின்… நான் ஒரு எழுத்தாளனாக இல்லாதிருப்பது என்னை எல்லைகளுக்குள் வரையறைப்படுத்தாது என்பதுவும் நிச்சயம்…

 

எழுத்து என்பது படித்த பெரும் கனவான்களின் தாயாதிச் சொத்தல்ல… ‘கன’வானாவதற்கு எனது உடல் நிறையும், என் வங்கிக் கணக்கில் பண நிறையும் மிக மிகக் குறைவு… அப்படியொரு தெருப்பொறுக்கித்தனமான (street urchin-like) தோற்றம் என்னது. தமிழ் எனது தாய்மொழி – அது மட்டுமே என்னைத் தமிழனாக்கிவிடவில்லை. தமிழை விரும்பும் எவருக்குமே தமிழ் உரித்தாகின்றது என்பது என் வாதம். தமிழை விரும்பி நேசிப்பவர்கள்தான் உண்மையான தமிழர்கள். இங்கு ‘தமிழ் எங்கள் மூச்சு – இறுதிவரை தொடரும் வாய்ப்பேச்சு’ என்று ஊரை வெருட்டி ஏய்த்துப் பிழைத்துத் தத்தம் சுவிஸ் வங்கிக் கணக்குகளைப் பெருப்பிக்கும் இரத்தக்கறை படிந்த வெள்ளை வேட்டியணிந்த வேடதாரிகளுக்கு இடமில்லை. மேலும் நான் வேட்டியணிவதும் இல்லை. அதனால் நான் தமிழில் எழுதுவதில் எந்தவொரு இடர்ப்பாடும் இல்லைத்தானே?

 

எதைப் பற்றி எழுதுவது? எதனைப் பற்றியுமே எழுதலாம். வரையறைதான் இல்லையே!

 

காதல் காதல் காதல்

காதல் இல்லையெனில் சாதல்

காதலுக்கும் கவிதைக்கும் – அப்படி

என்ன சம்பந்தம்?

 

தெருக்குப்பையும், குப்பத்து மனிதரும்,

மழைக் குளிரும், வெய்யிலும்,

அணில்களும், அழுகிய பழங்களும்,

பணத்திமிரும், சாதி வெறியும்,

மரத்துப்போன மனிதமும்,

மங்கிப் போன எம் கலாச்சாரமும்,

சுனாமியும், சூறாவளியும்…

கவிதைகளாய்ப் படவில்லையா

உங்களுக்கு?

 

அதனால் நான் எனக்குத்தோன்றும் எல்லாவற்றையும் பற்றியுமே எழுத எத்தனிப்பேன். தமிழுக்கு என்றுமே இல்லை தட்டுப்பாடு … கற்பனைக்கு இல்லை கட்டுப்பாடு…  (நன்றி: கவிப்பேரரசு என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற வைரமுத்து)

 

சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் சம்பந்தமாக நம் எல்லோருக்குமே சிற்சில கோபங்கள் இருக்கும். நானும் விதிவிலக்கல்ல. எனக்கும் கோபங்கள் உண்டுதான். இந்தச் சமூகம் திருந்தவேண்டும் என்கின்ற ஆதங்கம் என்னிடத்தில் நிறையவே உண்டு. இந்த வலைப்பூவில் அதனால் (அந்தவகையில்) வசைபாடல்கள் நிறையவே இருக்கும். எனது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறவும் முயல்வேன். சொறியையும் சிரங்கையும் ஒப்பனை பண்ணி மறைத்து விட்டு நடமாடும் போலித்தனமான (கூத்துக்கு மாத்துப் போடும்) போக்கிரித்தன்மை எனக்குச் சரிவராது.

 

என்னை ஏற்றுக் கொண்டால் (மட்டுமே) என்னுடன் இந்தப் பயணத்தில் வாருங்கள்…

வணக்கம் (அல்லது முன்னுரை)

ஜனவரி1, 2009 by மட்டக்களப்பான்

தமிழில் உலகளாவிய வலைப்பின்னலின் ஏதோ ஒரு மூலையிலுள்ள எனக்கான ஒரு வலைப்பூவினில் என் கருத்துக்களை நான் நினைத்தபடிச் சுதந்திரமாக எழுதுவது என்பது என் நீண்ட நாட் கனவாகவிருந்தது. கனவுகள் மெய்ப்படல் வேண்டும் என்று கனவு மட்டுமே கண்டுகொண்டிருந்த காலத்தில் – ஒரு நாள் – ஆனந்தவிகடனில், எழுத்தாளர் பாமரன் ஒரு வலைப்பூவினில் தொடர்ந்து எழுதி வருகின்றார் என அறியக்கிடைத்தது (www.pamaran.wordpress.com). பாமரன் என்னை வெகுவாகப் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவர் (அவரது எழுத்துக்களையும், நையாண்டித்தனமான கருத்துக்களையும், தாடியையும் எனக்கு மிகப் பிடிக்கும்). அப்படித்தான் WordPress வலைப்பூ(ச்) சேவை பற்றி அறிந்து கொண்டேன்… இன்று முதல் எழுத ஆரம்பித்துள்ளேன், தொடர்ந்தும் எழுத முயற்சி செய்வேன்.

 

தமிழின் இனிமையும், காத்திரமும், நடைப்பாங்கும் விஞ்ஞான ரீதியிலான விடய அலசல்களுக்கு மிகவும் தோதானவை என்பது அடியேனின் பணிவான கருத்து. இவ்வகையில் என் வாழ்வின் திசையை திருப்பிய/மாற்றிய எழுத்துக்கள் கார்ல் மார்க்ஸினுடையதோ வேறெந்தக் கொம்பனினுடையதோ அல்ல என்பதனியும் நான் கூறிக்கொள்ள வேண்டும். ‘விக்ரம்’ என்கின்ற அதி(மட்ட)மசாலாப் படத்தின் மூலக்கதையையும், கதை வசனத்தையும் எழுதிய சுஜாதா என்கின்ற ரங்கராஜனும்; அதி நையாண்டித்தனமான Disc World கிரந்தப் பிரபந்தங்களை ஆங்கிலத்தில் எழுதிவருகின்ற Terry Pratchettஉமே எனது துரோணர்கள். அவர்களது சொல் விளையாடல் உத்திகள் (wordplay techniques) எனக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம்.

 

நான் முறையாக ஆங்கிலத்தையோ தமிழையோ கற்றுப் பாண்டித்தியம் பெற்றவனல்லன். இலக்கணம் எனக்குத் தெரியாது. வாசிப்பதிலிருக்கும் ஆர்வம் என்னை எழுதத் தூண்டுகிறது – அவ்வளவே! கவிப் பேரரசுக்களிடமிருந்து தமிழை என்போன்ற அமெச்சூர்த்தனமானவர்களுக்கு இட்டு வந்த சுஜாதாவின் ‘பாமரருக்கான’ எழுத்துக்கள்தான் என் வழி… பாமரர்கள் எனும் போது எழுத்தாளர் பாமரனை மீண்டும் ஒரு முறை நினைவு கூர வேண்டும். பாமரனின் நையாண்டித்தனமான வசைபாடற் தொனியில் அமைந்திருக்கும் எழுத்துக்கள் தமிழின் அமிலத்தன்மைக்குச் சான்றாகின்றன. இந்தவகையில் பாமரனுக்கு சுஜாதாவைப் பிடிக்குமா; சுஜாதாவுக்குப் பாமரனைப் பிடித்திருந்ததா என்பது எழக்கூடுமான ஒரு கேள்விதான் என்றாலும் இந்தக் கதையின் (அதாவது அடியேனின் இந்தக்கதையின்) ஓட்டத்துக்குத் தேவையில்லாத ஒன்று!

 

இப்படி அப்படியெனத் தட்டுத்தடுமாறித் தொடங்கியிருக்கின்றேன் எழுதுவதற்கு… இனிவரும் காலம் தான் என் முயற்சியின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கும். வாழ்த்துங்கள்!

கடவுள் வாழ்த்து

டிசம்பர்30, 2008 by மட்டக்களப்பான்

எல்லாம் வல்ல எங்கிருந்தோ எம்மை இயக்குகின்ற அந்த மகாசக்திக்கு வணக்கங்கள்… கடவுள் பற்றிய என் கவிதையுடன் ஆரம்பிக்கின்றேன்.

 

கடவுள்

 

எல்லாவற்றையும் கடந்தும் -

எம் உள்ளும் இருக்கின்ற

புரிந்தும்

புரியாத

அறிந்தும்

அறியாத

அற்புத(ப்)புதிர்

 

மேலும், எம்மை வாழவைக்கும் இயற்கையையும் நினைவுகூரல் இத்தருணத்தில் அவசியமாகின்றது…

 

இயற்கை

 

மிருகத்தை

மனிதனாக்கிய

கடவுளின்

மாபெரும் சோதனைக் கூடம்…

 

இன்றோ – அந்த

முன்னாள் மிருகத்தால்

பல்வேறு

பரிசோதனைகளுக்குட்பட்டு

கூறிடப்பட்டுக் கிடக்கின்றது…